புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காஸியாபாத்தில் உள்ள தமது இல்லத்தில் 55 வயது ஆடவர் ஒருவர் மனைவியைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மனைவியைக் கொன்ற பிறகு, உடலை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே வைத்திருந்தார். துர்நாற்றம் வீசத் தொடங்கியதும், பரத் சிங் என்ற அந்த ஆடவர் அலறிக்கொண்டே தாம் தமது மனைவியைக் கொன்றுவிட்டதாகவும், காவல்துறையினரை அழைக்கும்படியும் தமது அண்டைவீட்டாரைக் கேட்டுக்கொண்டார்.
“பரத் அவரது மனைவி சுனிதாவை நெரித்துக்கொன்றதாக அண்டைவீட்டார் நம்மிடம் தெரிவித்தனர்,” என்று மூத்த காவல்துறை அதிகாரி நரேஷ் குமார் கூறினார்.
“நாங்கள் அந்த இடத்தைச் சென்றடைந்ததும் சுனிதாவின் உடலைக் கண்டோம். கொலை நடந்து மூன்று நாள்களானது போல் தெரிந்தது. கணவரைக் கைது செய்துள்ளோம்.
“குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியைக் கொன்றதாக விசாரணையின்போது பரத் நம்மிடம் கூறினார். சுனிதாவின் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்துவிட்டோம். உடலை உடற்கூராய்வு சோதனைக்கு அனுப்பி இருக்கிறோம்,” என்று திரு நரேஷ் கூறினார்.
விசாரனை தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.