வியட்னாமிய வரலாற்றில் ஆகப் பெரிய மோசடி வழக்கு: பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்

வியட்னாமிய வரலாற்றில் ஆகப் பெரிய மோசடி வழக்கு: பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும்

1 mins read
8d1798aa-b254-4020-a6c2-adf95f0bd974
வியட்னாமின் சொத்துச் சந்தை ஜாம்பவான்களில் ஒருவரான திருவாட்டி டுரோங் மை லானுக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 5ஆம் தேதியன்று தொடங்குகிறது. - படம்: வியட்னாமியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சு
Google News Preferred Icon

ஹனோய்: வியட்னாமைச் சேர்ந்த வர்த்தகர் 12 பில்லியன் அமெரிக்க டாலர் (S$16 பில்லியன்) கையாடியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்னாமிய சொத்துச் சந்தையின் ஜாம்பவான்களில் ஒருவரான திருவாட்டி டுரோங் மை லானுக்கு எதிராக வழக்கு தொடக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 5ஆம் தேதியன்று தொடங்குகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் திருவாட்டி டுரோங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே வியட்னாமிய வரலாற்றில் ஆகப் பெரிய மோசடி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

போலி நிறுவனங்களை அமைத்து, அரசாங்க அதிகாரிகளுக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து பேரளவிலான கடன் தொகையை திருவாட்டி டுரோங் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கியை அவர் சட்டவிரோதமான முறையில் தமது கட்டுக்குள் வைத்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, தமக்கு நெருக்கமானவர்களுக்கும் பணம் கிடைக்க திருவாட்டி டுரோங் மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

திருவாட்டி டுரோங் ஏமாற்றிப் பறித்ததாகக் கூறப்படும் பெரும் அளவிலான தொகை வியட்னாமின் 2022ஆம் ஆண்டு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ 11 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாட்டி டுரோங்கின் குற்றச் செயல்கள் வெளிவராமல் இருக்க, மொத்தம் 24 அரசாங்க அதிகாரிகள் அவரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
வியட்னாம்