சிட்னி: காணாமற்போன எம்எச்370 மலேசிய ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் குறித்துப் புதிய ஆதாரம் கிடைத்தால், அதைத் தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா தயாராக உள்ளது என அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் திங்கட்கிழமை ( மார்ச் 4) தெரிவித்தார்.
மேலும், தேடும் பணியை மீண்டும் தொடங்க மலேசியா முனைப்புடன் இருப்பதாக மெல்பர்ன் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று போயிங் 777 ரக விமானமான எம்எச்370 மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குச் சென்றுகொண்டிருந்தபோது ரேடாரிலிருந்து காணாமற்போனது. அதில் 239 பேர் இருந்தனர்.
மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் அவ்விமானத்தைக் கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபட்டன.
அவ்விமானம் காணாமற்போனது குறித்து எந்த ஆதாரமும் கிடைக்காததால் அதைத் தேடும் பணியை அந்நாடுகள் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைவிட்டன.

