கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சரிந்து வந்த நிலையில் தற்போது ஏற்றம் கண்டுள்ளது. அந்நாட்டு அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பை அந்நாடு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
ஆசிய பங்குச்சந்தையில் மார்ச் 4ஆம் தேதி தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான வர்த்தகத்தில் 0.6 விழுக்காடு உயர்ந்து மலேசிய ரிங்கிட் 4.7185க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக ரிங்கிட் கிட்டத்தட்ட 3.5186 என்ற மதிப்பில் மார்ச் 4ஆம் தேதி பிற்பகல் 12.55 மணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இது, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக வர்த்தகம் செய்யப்பட்ட ரிங்கிட்டை விட 0.2 விழுக்காடு அதிகம்.
வெளிநாட்டு முதலீட்டிலிருந்து வரும் வருவாயை ரிங்கிட்டாக மாற்ற அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களை அந்நாட்டு அரசு வலியுறுத்தியதன் மூலம் பங்குச்சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு உயரத் தொடங்கியது.
மலேசியப் பொருளியல் மேம்பாடு காணும் எனக் கருதப்படும் நிலையில் ரிங்கிட்டின் மதிப்பு வலுவாக இருக்குமென்று மலேசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.