ஜெருசலம்: லெபனானிலிருந்து இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சப்பட்ட ஏவுகணை காரணமாக இந்திய நாட்டவர் ஒருவர் மாண்டார்; இருவர் காயமடைந்தனர்.
அந்த ஏவுகணை இஸ்ரேல் எல்லைப் பகுதியில் உள்ள பழத்தோட்டத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாண்ட ஆடவரும் காயமடைந்த இருவரும் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர் கேரள மாநிலம், கொல்லம் நகரைச் சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வல்.
காயமடைந்த புஷ் ஜோசஃப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகிய இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்ஜுக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர் குணமடைந்து வருவதாகவும் இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தாருடன் அவரால் பேச முடிந்ததாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் கூறினர்.
கேளரத்தின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
தாக்குதலை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிப் படை நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.