கோலாலம்பூர்: மலேசிய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியின்போது மலாக்கா நீரிணையில் விழுந்து விபத்துக்குள்ளானது என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
இவ்விபத்து செவ்வாய்க்கிழமை(மார்ச் 5) நடந்தது என்றும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த இரு விமானிகள் உட்பட நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்றும் ஆணையம் கூறியது.
இவ்விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஆணையம் மேலும் குறிப்பிட்டது.
அங்சா தீவு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் மலாக்கா நீரிணையில் விழுந்து நொறுங்கியது என இவ்விபத்துக்கான காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மலேசியக் கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக ஏஎஃப்பி கூறியது.