ஜெனிவா: எல் நினோ வானிலை மாற்றத்தால் கடந்த டிசம்பரில் வெப்பம் உச்சத்தைத் தொட்டது.
அது, ஐந்தாவது ஆக உச்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்போது முதல் மே வரையில் வெப்பநிலை இயல்பைவிட கூடுதலாக இருக்கும் என்று மார்ச் 5ஆம் தேதி அன்று ஐநா தெரிவித்தது.
எல் நினோ தற்போது படிப்படியாக வலுவிழந்து வருகிறது. இருந்தாலும் வளிமண்டலத்தில் சிக்கியுள்ள வெப்பத்தைத் தூண்டுவதன் மூலம் அதன் தாக்கம் வரும் மாதங்களில் தொடரும் என்று ஐநாவின் உலக வானிலை அமைப்பு (WMO) கூறியது.
இதனால் மார்ச் முதல் மே மாதம் வரையில் கிட்டத்தட்ட அனைத்து நிலப்பகுதிகளிலும் சாதாரண வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் இருக்கும் என்று அந்த அமைப்பு தனது காலாண்டு மதிப்பீட்டில் கூறியது.
எல் நினோ, மத்திய, கிழக்கு மற்றும் பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஆகப்பெரிய அளவில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.
பொதுவாக, அது உருவாகிய அடுத்த ஆண்டில் உலகளாவிய காலநிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக 2024ஆம் ஆண்டில் அதன் தாக்கத்தை அதிகமாக எதிர்பார்க்கலாம். உலக அளவில் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணமான இந்த வானிலை மாற்றம் இயற்கையாகவே நிகழ்ந்து வருகிறது. இது, பொதுவாக உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்துடன் தொடர்புடையது.
எல்-நினோ பருவமாற்றத்தால் உலகின் சில பகுதிகளில் வறட்சியும் மற்றும் பிற இடங்களில் கனமழையும் ஏற்படுகிறது.
இந்த வானிலை நிகழ்வு சராசரியாக ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு நிகழ்கிறது. பொதுவாக ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும்.
“மார்ச்-மே மாதங்களில் எல் நினோ பருவநிலை மாற்றம் 60 விழுக்காட்டுக்கு தொடர வாய்ப்பு உள்ளது. மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரை 80 விழுக்காடு நடுநிலையில் வானிலை இருக்கும்,” என்று அந்த அமைப்பு தெரிவித்தது.