கோலாலம்பூர்: ஊழலில் ஈடுபட்டதற்காக மலேசியாவின் கூட்டரசு நில மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபெல்டா) முன்னாள் தலைவரான முகம்மது இசா அப்துல் சமாட்டுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தண்டனைத் தீர்ப்பையும் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மார்ச் 6ல் ரத்து செய்ததாக திரு முகம்மது இசாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஃபெல்டா அமைப்பின் தலைவராக திரு முகம்மது இசா பதவி வகித்தார்.
ஹோட்டல் ஒன்றை வாங்குவது தொடர்பாக அவர் ஏறத்தாழ 3 மில்லியன் ரிங்கிட் (S$851,000) லஞ்சம் வாங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை திரு முகம்மது இசா மறுத்தார்.
இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று 2021ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து திரு முகம்மது இசா மேல்முறையீடு செய்தார்.
அவரது வாதத்தை ஏற்ற மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.
திரு முகம்மது இசா மலேசிய அமைச்சராகவும் அம்னோ கட்சியின் உதவித் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டில் அவர் அம்னோ கட்சியிலிருந்து விலகினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த முடிவு குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.