லண்டன்: உலகப் பெருங்கடல்களின் வெப்பநிலை பிப்ரவரி மாதம் புதிய உச்சத்தைத் தொட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கடலில் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 21.06 டிகிரி செல்சியசாகப் பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் பருவநிலை மாற்றச் சேவை (சி3எஸ்) மார்ச் 7ஆம் தேதி தெரிவித்தது.
கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 1979ஆம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட்டில் அது ஆக அதிகமாக 20.98 டிகிரி செல்சியசாகப் பதிவாகியிருந்தது. சென்ற மாதம் அது மேலும் உயர்ந்தது.
இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் உலகின் ஆக வெப்பமான பிப்ரவரியாகத் தெரிவிக்கப்பட்ட வேளையில் கடல் வெப்பநிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக, ஆக அதிக வெப்பநிலை பதிவான மாதமாக, பிப்ரவரி 2024 அமைந்தது.
கடல் நீர் வெப்பம் அதிகரிப்பதால் நான்காவது முறையாக, மிகப் பெரிய அளவில் பவளப்பாறைகள் நிறமிழக்கும் நிகழ்ச்சி உலகின் தென்பாதியில் ஏற்படக்கூடும் என்று கடல்துறை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உலகம் இதுவரை சந்தித்திராத வகையில் அது மோசமாக இருக்குமென்று அவர்கள் கணித்துள்ளனர்.