மாஸ்கோ: உக்ரேனிய மோதல் ஐரோப்பாவில் முழுமையான போராக மாறக்கூடுமென ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
புதிய மோதலில் ரஷ்யப் படைகள் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் கணிசமாக அதிகரித்து வருவதாக கர்னல்-ஜெனரல் விளாடிமிர் ஸருட்னிட்ஸ்கி கூறினார்.
ரஷ்ய ராணுவக் கல்விக் கழகத்தின் தலைவரான அவர், தற்காப்பு அமைச்சு வெளியிடும் ‘ராணுவச் சிந்தனை’ எனும் சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய அரசாங்க ஊடகமான ஆர்ஐஏ செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வியாழக்கிழமை (மார்ச் 7) வெளியிட்டுள்ளது.
“உக்ரேனிய மோதல் பெரிய அளவிலான போராக உருவெடுப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை.
“நம் நாட்டுக்கான முக்கிய ராணுவ மிரட்டலாக விளங்குவது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ரஷ்ய-எதிர்ப்புக் கொள்கைதான்.
“சாத்தியமான அனைத்து வழிகளிலும் ரஷ்யாவின் வலுவைக் குறைக்கவும் அதன் இறையாண்மையைக் கட்டுப்படுத்தவும் அதன் தற்காப்பு உரிமையை அழிக்கவும் அவை முயல்கின்றன,” என்று கர்னல்-ஜெனரல் ஸருட்னிட்ஸ்கி கூறியதாக ஆர்ஐஏ குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனுக்குக் கூடுதல் ஆயுத உதவி, நிதியுதவி வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலித்து வரும் வேளையில் அவரது கருத்து வெளிவந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்ய உறவுகள், 1962ஆம் ஆண்டின் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்குப் படைகளை அனுப்பினால், அணுவாயுதப் போரைத் தூண்டுவதற்கு அது சமமாகும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.