தைப்பே: தைவானியத் தொழிலாளர் துறை அமைச்சர் சு மிங்-சுன், இந்தியாவிலிருந்து பணியமர்த்தப்படும் ஊழியர்கள் குறித்துத் தாம் வெளியிட்ட கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
‘சரும நிறம், உணவுப் பழக்கங்கள்’ ஆகியவற்றின் அடிப்படையில் வடகிழக்கு இந்தியாவிலிருந்து ஊழியர்களைப் பணியமர்த்த தைவான் திட்டமிட்டிருப்பதாக அவர் முன்னர் கூறியிருந்தார்.
இந்தியாவின் அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தைவானியர்களைப் போன்றே காணப்படுவர் என்று கருத்துரைத்த யாஹூ தொலைக்காட்சிக்கான நேர்காணல், மார்ச் 1ஆம் தேதி யூடியூப் ஒளிவழியில் பதிவேற்றப்பட்டது.
அதையடுத்து தைவானின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அமைச்சரைக் கடுமையாக விமர்சித்தனர்.
அமைச்சரின் உரை ‘இனவாதக் கருத்துகளைக்’ கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் சாடியிருந்தன.
ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் தைவான் அண்மையில் இந்தியாவுடன் புரிந்துணர்வுக் குறிப்பில் கையொப்பமிட்டது. அதுகுறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் சு அவ்வாறு கூறியிருந்தார்.
அந்த நேர்காணலில், “இந்தியாவிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலைத்தரமும் நிலைத்தன்மையும் நன்றாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டதாகவும் தைவான் நியூஸ் செய்தி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அமைச்சரின் கருத்துகள் பாகுபாட்டின் அடிப்படையிலானவை அல்ல என்று கூறிய தைவானியத் தொழிலாளர் அமைச்சு, இந்தச் சூழல் குறித்து மார்ச் 4ஆம் தேதி மன்னிப்புக் கோரியதாக சிஎன்என் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவின் பன்முக, வளமான கலாசாரச் சூழலைத் தைவான் மதிப்பதாகவும் வருங்காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பை மேம்படுத்த இதை அடிப்படையாகக் கொள்ளவிருப்பதாகவும் அமைச்சு கூறியது.
மார்ச் 5ஆம் தேதி, தைவானிய வெளியுறவு அமைச்சும் இதன் தொடர்பில் மன்னிப்புக் கோரியது.
அன்று காலை நடைபெற்ற ஆட்சிமன்றக் கூட்டத்தில் திருவாட்டி சு தமது ‘தவறான’ கருத்துகளுக்காக மன்னிப்புக் கோரியதாக தைவானின் மத்திய செய்தி அமைப்பு தெரிவித்தது.