வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உதவி வழங்குவதை ஒரு பேரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று இஸ்ரேலை எச்சரித்துள்ளார்.
காஸாவில் உடனடி, தற்காலிக சண்டை நிறுத்தம் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“இஸ்ரேலின் தலைமைக்கு நான் இதைச் சொல்கிறேன். மனிதாபிமான உதவியை இரண்டாம்பட்சமாகக் கருதக் கூடாது அல்லது அதை வைத்து பேரம் பேசக் கூடாது. அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்,” என்று நாடாளுமன்றத்தில் தமது வருடாந்தர உரையில் திரு பைடன் தெரிவித்தார்.
காஸாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐநா, எச்சரித்துள்ளது. இந்த நிலையில் ஒரு நாள் முன்பு அதிகாரிகள் வெளியிட்ட காஸாவுக்கான திட்டத்தை அவர் பட்டியலிட்டார்.
அதன்படி உதவிப் பொருள்களை கடல் வழியாகக் கொண்டு வருவதற்காக அமெரிக்க ராணுவம் காஸாவில் தற்காலிக துறைமுகம் ஒன்றை கட்டும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
இந்தத் தற்காலிக துறைமுகம், நூற்றுக்கணக்கான டிரக் மூலம் பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க உதவும் என்று அதிகாரிகள் கூறினர்.
அமெரிக்க ராணுவம் அமைக்கும் துறைமுகத்தின் ஒரு பகுதியாக தற்காலிக படகு முனையம் கட்டப்படும். இந்த முனையம், கப்பலிலிருந்து நிவாரணப் பொருள்களை கடற்கரைக்கு கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படும்.
தற்காலிக துறைமுகம் அமைக்கப்படுவதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறிய அதிகாரிகள், பெரிய கப்பல்கள் கொண்டு வரும் மருந்து, தற்காலிக கூடாரம் போன்றவற்றை இதன் மூலம் பெற முடியும் என்று கூறினர்.
ஆனால் காஸா வட்டாரத்தில் ஹமாஸ் போராளிகள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பைடன் நியாயப்படுத்தி பேசினார்.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரத் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.
“பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு இன்றே மோதலுக்கு முடிவு காணப்பட வேண்டும்,” என்று அதிபர் பைடன் வலியுறுத்தினார்.
“ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் உடனடி சண்டை நிறுத்தத்திற்கு நான் இடைவிடாமல் பணியாற்றி வருகிறேன். இந்த ஒப்பந்தம் பிணைக் கைதிகளை வீடு திரும்ப வைக்கும், சகிக்க முடியாத மனிதாபிமான நெருக்கடியில் தளர்வு ஏற்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாலஸ்தீன நாடு உருவாவதற்கு தமது ஆதரவை அவர் மீண்டும் மறுவுறுதிப்படுத்தினார்.
ஆனால் இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
“எதிர்காலத்தைப் பார்த்தால் இரண்டு நாடுகள் என்பதே சிறந்த தீர்வாக இருக்கும்,” என்று அதிபர் டைபன் மேலும் தெரிவித்தார்.