வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் ஒருவரின் தந்தை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு நடப்பு பற்றி உரையாற்றிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
ஸ்டீவ் நிக்கூய் எனும் அந்நபர் மீது சற்று தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதென அமெரிக்க நாடாளுமன்றக் காவல்துறையினர் தெரிவித்தனர். 2021ஆம் ஆண்டு அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியபோது திரு நிக்கூயின் மகன் கொல்லப்பட்டார்.
51 வயது நிக்கூய், திரு பைடன் உரையாற்றியபோது ‘ஆபி கேட், ஆபி கேட்’ என்று கூச்சலிட்டார். தனது மகன் லான்ஸ் கார்ப்பரல் கரீம் நிக்கூய் மாண்ட இடத்தைக் குறிப்பிட்டு அவர் அவ்வாறு கூச்சலிட்டார்.
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த கடைசி சில நாள்களில் திரு நிக்கூயின் மகன் உட்பட 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஃபுளோரிடா மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் பிரையன் மாஸ்ட் என்ற அரசியல் தலைவரின் அழைப்பின்பேரில் திரு நிக்கூய் அதிபர் உரையாற்றிய நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.