மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலுள்ள அமெரிக்கர்கள் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கும்படி அங்குள்ள அமெரிக்கத் தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது.
மாஸ்கோவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று வேவுத் தகவலறிக்கைகள் கூறுவதாக அது எச்சரித்தது.
அமெரிக்க குடிமக்கள் அனைவரும் ரஷ்யாவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமெனப் பலமுறை வலியுறுத்திய அமெரிக்கத் தூதரகம், மிரட்டலின் தன்மை குறித்த மேல்விவரங்களை வெளியிடவில்லை.
“மாஸ்கோவில் இசை நிகழ்ச்சிகள் உட்பட, அதிகமானோர் கூடியுள்ள இடங்களைக் குறிவைத்துத் தீவிரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தூதரகம் கண்காணித்து வருகிறது.
“அடுத்த 48 மணி நேரத்திற்கு கூட்டமான இடங்களைத் தவிர்க்கும்படி அமெரிக்கர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது,” என்று மாஸ்கோவிலுள்ள ரஷ்யத் தூதரகம் அதன் இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
உக்ரேனியப் போரைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன.
அந்த நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாகத் துருப்புகளை அனுப்பினால், அணுவாயுதப் போரைத் தூண்டுவதாகக் கருதப்படும் என்று ரஷ்ய அதிபர் புட்டின் ஏற்கெனவே எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா உக்ரேனுக்கு நிதி, ஆயுதம், உளவுத் தகவல்கள் போன்ற வகையில் ஆதரவளித்து ரஷ்யாவிற்கு எதிராகச் செயல்படுவதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் சாடியுள்ளது.


