ஹாங்காங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் வர்த்தக சமூகத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
அந்தச் சட்டத்தின் நோக்கத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சென்ற மார்ச் 8ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரிலேயே இதனை சட்டமாக்க வேண்டும் என்று ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தேசத் துரோகம், கிளர்ச்சி போன்ற குற்றச்செயல்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.
கடந்த 2020ஆம் ஆண்டில் ஹாங்காங் முழுவதும் பெருமளவில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் அவற்றை நசுக்குவதற்காக பெய்ஜிங் இந்தச் சட்டத்தை ஹாங்காங்கில் அறிமுகப்படுத்தியது.
வரைவு மசோதாவை இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற ஹாங்காங் அரசாங்கம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
ஹாங்காங்கின் அடிப்படைச் சட்டத்தின்படி உள்நாட்டில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்றுவது தங்களுடைய அரசியலமைப்புப் பொறுப்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
1997 இல் பிரிட்டனிடமிருந்து சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட பிறகு ஒரு சிறிய அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் அந்நகரம் நிர்வகிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை செயல்படுத்துவது குறித்த கேள்விகள் வர்த்தக சமூகத்தினரிடையே அச்சத்தை எழுப்பியிருக்கின்றன.
தேசத்துரோகம், கிளர்ச்சி, உளவு மற்றும் அரசாங்க ரகசியங்களைத் திருடுதல், தேசிய பாதுகாப்பை சீர்குலைத்தல் மற்றும் வெளிநாட்டுத் தலையீடு போன்ற குற்றங்களுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படும்.
ஆனால் சட்டத்தின் வரைமுறைகள் தெளிவாக இல்லை என்று ஹாங்காங்கில் உள்ள சுவீடன் வர்த்தக தொழில் சபையின் தலைவர் கிறிஸ்டியன் ஓடெப்ஜர் தெரிவித்தார்.
உதாரணமாக, வரைவு மசோதாவின்படி உளவுத் துறை குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் ஹாங்காங்கின் பொருளியல், சமூக, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.