சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு வட்டாரத்தில் சனிக்கிழமை (மார்ச் 9) காலை கடுமையான வெப்பம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், டாஸ்மேனியா, விக்டோரியா போன்ற இடங்களில் வெப்ப அலைத் தாக்கம் குறித்து வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிக்கக்கூடும் என்று மார்ச் 9ஆம் தேதி அது எச்சரித்துள்ளது.
விக்டோரியா மாநிலத் தலைநகர் மெல்பர்னில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அங்கு மார்ச் மாதத்தில் நிலவும் சராசரி வெப்பநிலையைவிட இது 15 டிகிரி செல்சியசுக்குமேல் அதிகம்.
உள்ளூர் நேரப்படி காலை 10.20 மணிக்கு வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.
மெல்பர்ன், கீலோங் உட்பட மத்திய, தென்மேற்கு மாவட்டங்களில் கடுமையான காட்டுத் தீ ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்படுவதாக வானிலை ஆய்வகம் அதன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இத்தகைய நிலை, மார்ச் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், விக்டோரியா மாநிலத்தில் கடுமையான வெப்ப அலை, காட்டுத் தீ ஆகியவற்றால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.