வாஷிங்டன்/ஏடன்: ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏமனிலிருந்து ஏடன் வளைகுடாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாய்ச்சியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம், ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் பதிவிட்டது.
‘புரோபெல் ஃபோர்சுன்’ என்ற சிங்கப்பூர் கொடி தாங்கிய, சிங்கப்பூருக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பலை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத கடலோரக் காவல்படை அதிகாரி கூறியதன்படி, ஏடன் கடலோரத்திற்கு அப்பால் சென்ற சரக்குக் கப்பலைக் குறிவைத்து ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அறியப்படுகிறது.
கப்பல் இருந்த பகுதியில் குறைந்தது இரண்டு ஏவுகணைகள் வெடித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தை பிரிட்டிஷ் கடல்துறை வர்த்தகச் செயல்பாட்டு அமைப்பும் உறுதிப்படுத்தியது.
ஹூதி படையினர் இதுவரை தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இதையடுத்து, செங்கடல் பகுதியில் ஏமனின் ஹூதி படையினர் பாய்ச்சிய 15 ஆளில்லா வான்வழி வாகனங்களை, அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் விமானங்களும் சுட்டு வீழ்த்தியதாக மார்ச் 9ஆம் தேதியன்று அமெரிக்க மத்திய தளபத்தியம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.