கொலம்பஸ்: அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் பெண்கள் இருவர், பணம் எடுக்க ஒருவரின் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த ஆடவரின் வங்கிக் கணக்கிலிருந்து 900 டாலர் (1,200 வெள்ளி) தொகையை எடுக்க அப்பெண்கள் அவ்வாறு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டன.
மாண்ட 80 வயது டக்லஸ் லேமன் என்பவரின் உடலை வாகனத்தில் வங்கிக்குக் கொண்டு சென்றதாக 55 வயது லொரீன் பியா ஃபெராலோ, 63 வயது கேரன் காஸ்போம் ஆகியோர் மீது கடந்த திங்கட்கிழமையன்று (மார்ச் 4) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அஷ்டபுலா சிட்டி எனும் நகரில் இருக்கும் வங்கிக்கு அவ்விருவரும் சடலத்தைக் கொண்டு சென்றதாக நியூயார்க் போஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டது.
பணத்தை எடுத்துக்கொண்ட பிறகு அந்தப் பெண்கள், அஷ்டபுலா கெளன்டி மருத்துவமனையில் திரு லேமனின் உடலை விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. திரு லேமனையோ தங்களையோ அவர்கள் அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை; சில மணிநேரத்துக்குப் பிறகு அப்பெண்களில் ஒருவர் தொலைபேசிவழி மருத்துவமனையை அழைத்து திரு லேமனைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களைத் தெரியப்படுத்தியதாகத் தகவல்கள் குறிப்பிட்டன.
பின்னர் அதிகாரிகள் திரு லேமனின் அடையாளத்தை உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.