ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்லும் இரு எல்லைப் பாதைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு ஏராளமான பயணிகள் தவியாய்த் தவித்தனர்.
இதையடுத்து ஜோகூரில் உள்ள சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்தல் (சிஐகியு) வளாகத்திற்கு நேரடியாக வந்த ஜோகூர் முதல்வர் தாமதத்திற்கான காரணத்தை கேட்டறிந்தார்.
மலேசியாவின் வெளியேறும் மற்றும் நுழையும் பாதைகளில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (பிஎஸ்ஐ) மற்றும் சுல்தான் அபு பக்கர் கட்டடம் (கேஎஸ்ஏபி) ஆகிய இரண்டு சிஐகியு வளாகங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கான தானியக்க சோதனைக்கான சாதனங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று மார்ச் 9ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.
“தீச்சம்பவம் ஏற்பட்டதால் கணினிக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு மின்னணு நுழைவாயில்கள் (இ-கேட்) செயல்படாமல் பிரச்சினை மேலும் மோசமடைந்தது,” என்றார் அவர்.
“இந்தப் பிரச்சினையால் அதிகாரிகளால் சோதிக்கப்படும் முகப்புகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கார்களுக்கான சோதனைகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது,” என்று அவர் மேலும் விளக்கினார்.
இந்தப் பிரச்சினை குறித்து உள்துறை அமைச்சுடன் தாம் தொடர்புகொண்டதாகவும் அவர் கூறினார்.
“இரண்டு வளாகங்களிலும் உள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்.” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவின் இரண்டு தரைவழி நுழைவாயில்களில் இரண்டு நாள்களாக மணிக்கணக்காக பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
மலேசிய குடிநுழைவு சோதனைகளைக் கடந்து செல்ல பல மணி நேரம் மோட்டார் சைக்கிளோட்டிகள் காத்திருந்ததாகவும் இரண்டு தரைவழிப் பாதைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் மார்ச் 6ஆம் தேதி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட நிறுவனம் மேற்கொண்ட கணினி கட்டமைப்புப் பணிகளால் இந்தத் தாமதம் ஏற்பட்டது என்று பிப்ரவரி 29ஆம் தேதி குடிநுழைவு தலைமை இயக்குநர் ரஸ்லின் ஜுசோ அந்த நாளிதழிடம் கூறியிருந்தார்.