சோல்: தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் சுகாதாரத் துறையை ஆதரிக்கும் வகையில் அதிக நிதியை தென்கொரிய அரசாங்கம் ஒதுக்கியது.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மருத்துவ மாணவர்கள் தொடர் விடுப்புப் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
“மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார பராமரிப்பில் ஏற்பட்டுள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் நீண்ட நேரம் செயல்படும் உள்ளூர் மற்றும் தேசிய மருத்துவ நிலையங்களுக்கு S$40 மில்லியன் நிதியை உடனடியாக அரசாங்கம் வழங்கும்,” எனத் தென்கொரிய துணை சுகாதார அமைச்சர் பார்க் மின்-சூ புதன்கிழமை (மார்ச் 13) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
போராட்டக் காலத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
“சிலரின் புறக்கணிப்பால் சுகாதாரத் துறை இனி பாதிக்கப்படக் கூடாது. உயிர்களைக் காப்பதும் நோயாளிகள் சிகிச்சைக்குக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதும் அரசாங்கத்தின் தலையாயக் கடமை,” என அவர் குறிப்பிட்டார்.