ஜோகூர் பாரு: இந்த ஆண்டின் ரமலான் நோன்பு மாதத்தில் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் ரமலான் சந்தையில் பொருள் வாங்கக் குவியக்கூடுமென்று ஜோகூர் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரிங்கிட்டின் மதிப்பு குறைந்திருப்பது இதற்குக் காரணம்.
கடந்த சில மாதங்களில் சிங்கப்பூரிலிருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வர்த்தகர் ஹெல்மி ரஸாலி கூறினார். இவர் ரமலான் சந்தையில் பானங்களை விற்கும் கடையை நடத்துகிறார்.
“ஜோகூர் பாரு எப்போதுமே சிங்கப்பூரர்கள் பொருள் வாங்க விரும்பும் இடமாக விளங்குகிறது. குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் அவர்கள் இங்கு வருவர். எந்தப் பண்டிகையானாலும் சிங்கப்பூரர்கள் இங்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்வர்,” என்றார் அவர்.
“இருப்பினும் அண்மைய நாள்களில் விழாக்காலங்களிலும் அதற்கு முந்தைய வாரங்களிலும் இவ்வாறு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சீனப் புத்தாண்டு, சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களிலும் அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து வந்ததைப்போன்றே ரமலான் மாதத்திலும் வருவர் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று ஹெல்மி கூறினார்.
“சென்ற ஆண்டு ரமலான் மாதத்தின் முதல் நாளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு கூட்டம் சற்றே அதிகரித்துள்ளது. சில நாள்கள் கழித்து, வாரயிறுதிகளிலும் நோன்புப் பெருநாள் நெருங்கும் வேளையிலும் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம்,” என்றார் பாஸ்தா, கோழி இறைச்சி விற்கும் திருவாட்டி நூர் ஃபைருஸ் அப் காதிர்.
உணவு விலையைக் கூட்டும் திட்டம் இல்லை என்றார் அவர். சென்ற ஆண்டைவிட இப்போது, உணவைத் தயாரிப்பதற்கான பொருள்களின் விலை அதிகரித்தாலும் வாடிக்கையாளர்களை இழக்க விரும்பவில்லை என்றார் அவர்.
சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் கூடுதலானோர் வந்தாலும், கட்டுப்படியான விலையில் பொருள்களை விற்பது முக்கியம் என்றார் வறுத்த கோழி இறைச்சியை விற்கும் முகமது அக்மல் ஹூசைன்.
வர்த்தகர்களில் சிலர் விலையைக் கூட்டினாலும், ஜோகூர் பாரு ரமலான் சந்தையில் உணவு விலை அதிகம் என்ற பொதுவான கருத்து ஏற்பட்டுவிடும் என்றார் அவர்.