கோலாலம்பூர்: சிங்கப்பூர் வர்த்தகரும் மலேசியாவின் பிரபல சொத்து மேம்பாட்டாளருமான அக்பர் கானை மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி) விசாரித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1990களின் பிற்பகுதியில் முடக்கப்பட்ட நான்கு பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள ‘குளோப் பங்குகளை வெளியேற்றுவதில் அந்த 83 வயது நபர் முக்கிய பங்காற்றியதாக நம்பப்படுகிறது.
எம்ஏசிசி புலனாய்வாளர்கள் கடந்த வாரம் அவரை தற்காலிகமாக தடுத்துவைத்து விசாரணை நடத்தினர். பிஆர்டிபி டெவலப்மெண்ட்ஸ் எனும் பெரிய சொத்து மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோலாலம்பூரில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றதாக அந்தப் பிரிவின் நெருக்கமான தொடர்புடைய வட்டாரம் தெரிவித்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக அவருடைய வர்த்தகம் மற்றும் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது மட்டுமல்லாமல் தனது சொத்து மற்றும் குடும்பத்தின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று எம்ஏசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் சிஎன்ஏ தொடர்புகொண்டபோது எம்ஏசிசியின் விசாரணை குறித்து 83 வயது அக்பர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
“இந்த விவகாரம் நடந்துகொண்டிருப்பதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நியாயமான விசாரணையை உறுதி செய்வதில் எங்களுடைய முழுக் கவனமும் இருக்கும்,” என்று அக்பரின் அலுவலகம் கூறியது.
இதற்கிடையே வரும் நாள்களில் வர்த்தகரும் அவரது நெங்கிய சகாக்களும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என எம்ஏசிசி தகவல் தெரிவித்தது.