கோலாலம்பூர்: குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருதை மலேசியா ஒத்திவைக்கக்கூடும்.
குடியுரிமைச் சட்ட மாற்றங்கள் தொடர்பில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான கூட்டணயில் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.
மாற்றங்களின் ஓர் அங்கம், வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகள் தங்களின் பெற்றோரின் மூலம் மலேசியக் குடியுரிமை பெற வழிவகுக்கும். மலேசியக் குடியுரிமை வைத்திருக்கும் அத்தகைய பெற்றோருக்கு இது பொருந்தும்.
அதேவேளை, மாற்றங்களின் மற்றோர் அங்கத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடியுரிமையின்றி தவிக்கக்கூடும் என்று விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும் என்று திரு அன்வார் கூறியுள்ளார். இரு தரப்பு உறவையும் வட்டாரங்களுக்கு இடையிலான உறவையும் வலுப்படுத்த அவ்வாறு செய்யவேண்டும் என்றார் அவர்.
ஜெர்மனிக்கு ஆறு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில் திரு அன்வார் அவ்வாறு சொன்னார்.