பேங்காக்: ஒரே பாலின திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் திட்டத்தை தாய்லாந்து முன்னெடுத்துச் செல்லவிருக்கிறது.
அதற்குரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்துள்ளனர்.
அவ்வாறு நிகழ்ந்தால், தென்கிழக்காசியாவிலேயே இரு பாலினங்களுக்கிடையே சமமான திருமண உரிமைகளை உறுதிசெய்யும் முதல் நாடாக தாய்லாந்து திகழும்.
அந்நாட்டு மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டு ஒரு குழு மார்ச் 14ஆம் தேதி தாய்லாந்தின் சிவில் மற்றும் வணிகக் குறியீட்டு திருத்த மசோதாவின் வரைவுக்கு ஒப்புதல் அளித்தது என்று அக்குழுவின் துணைத் தலைவர் அக்காரானுன் கான்கிட்டினான் தெரிவித்தார்.
இந்தத் திருத்த மசோதாவின் இரண்டாம், மூன்றாம் வாசிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மார்ச் 27ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் திரு கான்கிட்டினான் கூறினார்.
மசோதாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஒப்புதல் கிடைத்து விட்டால், அது செனட் சபையில் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர் அது மன்னரின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும். அதன் பின்னர்தான் அது சட்டமாக்கப்படும். இந்த நடைமுறை இவ்வாண்டு இறுதியில் நிறைவுபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் திரு கான்கிட்டினான் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறுவது என்பதை, இரு தனிநபர்களுக்கு இடையே நடைபெறுவது என்று அந்த மசோதா ஒரு முக்கிய அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வரும்.
மேலும், ‘கணவன் மனைவி’ என்று அழைக்கப்படும் அதிகாரபூர்வ சட்ட நிலை, பாலினத்தைக் குறிக்காமல் ‘திருமணமான ஜோடி’ என்று அழைக்கப்படும்.
இந்த மசோதா, ஆண்- பெண் ஜோடி, சிவில் மற்றும் வணிகக் குறியீடு மூலம் அனுபவிக்கும் அதே சலுகைகளை பாலின ஈர்ப்பு விருப்புரிமை கொண்டோரும் அனுபவிக்க வகை செய்யும்.
‘திருமணச் சம உரிமை மசாதா’ என அழைக்கப்படும் இது அங்கீகரிக்கப்பட தமது நிர்வாகம் ஆன அனைத்தையும் செய்யும் என்று 2023 செப்டம்பரில் பதவியேற்ற பிரதமர் சிரேத்தா தவிசின் தாய்லாந்து மக்களிடம் அளித்த முக்கிய உறுதிகளில் ஒன்று.
இந்த உத்தேச மசோதாவுக்கு திரு சிரேத்தாவின் அமைச்சரவை 2023 டிசம்பரில் ஒப்புதல் அளித்தவுடன் நாடாளுமன்றம் மசோதாவின் முதல் வாசிப்புக்கு அதனை ஏற்றுக்கொண்டது.
உலகெங்கிலும் 40க்கும் குறைவான நாடுகளே ஒரே பாலின திருமணத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆசியாவில் என்று பார்த்தால், தைவான், நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகள்தான் அதை சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆசியாவின் இதர நாடுகளில், பாலின ஈர்ப்பு விருப்புரிமை கொண்டோரின் உரிமை தொடர்பான முயற்சிகளுக்கு மாறுபட்ட அளவுகளில் வெற்றி கிட்டியுள்ளது.
இவ்வாரம், ஜப்பானின் சப்போரோ நகரத்தின் உயர் நீதிமன்றம், ஒரே பாலின திருமணத்தைத் தடை செய்யும் நாட்டின் முடிவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது.
இதனால், அவ்வழக்கு வரும் வாரத்தில் ஜப்பானின் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்கிறது. அங்கு அரசாங்கத்தின் முடிவுக்கு தோல்வி கிடைத்தால், அச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்துக்கு அழுத்தம் ஏற்படலாம்.
2023ல் ஹாங்காங் உச்ச நீதிமன்றம் ஒரே பாலின பந்தத்தை ஆதரிக்கும்படி அரசாங்கத்துக்கு உத்தரவிட்டது. அது பாலின ஈர்ப்பு விருப்புரிமை கொண்டோருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
இதற்கிடையே 2023ல், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்க மறுத்துவிட்டது. அது நாடாளுமன்றத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று அது கூறியது.
தென்கிழக்காசியாவில், ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை அங்கீகரிக்காத இந்தோனீசியா, அண்மையில் திருமணத்துக்குப் பிந்திய அனைத்துவிதமான கள்ள உறவுக்கும் தடை விதித்தது.
சிங்கப்பூரில், ஆண்களுக்கிடையிலான பாலுறவு குற்றமற்றது என்று கூறப்பட்டாலும், திருமண சமத்துவத்திற்கான பாதையைத் தடுத்துள்ளது.
தாய்லாந்தின் இந்த புதிய மசோதா, 18 வயதுக்கு மேற்பட்ட ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கிறது என்றும் அதன் மூலம் அவர்கள் பிள்ளையைத் தத்தெடுப்பது, வரிச் சலுகைகளைப் பெறுவது, சொத்தில் உரிமை கொண்டாடுவது போன்ற சலுகைகளை அனுபவிக்க முடியும் என்று நாடாளுமன்றக் குழுவின் மற்றொரு துணைத் தலைவர் திரு துன்யவாஜ் கமோல்வோங்வாட் விவரித்தார்.