டோஹா/ ஜெருசலம்: காஸா வட்டாரத்தில் உள்ள குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐநா உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்குத் திரும்பத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹமாசுடனான புதிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக பேராளர் குழுவை ஜோர்தானுக்கு அனுப்ப இஸ்ரேல் முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண மற்றும் பணி அமைப்பு (UNRWA), வடக்கு காஸாவில் இரண்டு வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகக் கூறியது.
இதையடுத்து அனைத்துலக உணவுப் பாதுகாப்பின்மை கண்காணிப்பு அமைப்பான ஐபிசி, காஸாவில் பட்டினி நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே மாதம் வரையில் கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கடந்த டிசம்பரில் அது எச்சரித்திருந்தது.
ஐபிசி பஞ்சத்தை அறிவிப்பதற்கு காஸா மக்களில் குறைந்தது 20 விழுக்காட்டினர் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். மூன்றில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஒவ்வொரு 10,000 பேரில் இருவர் பட்டினியால் தினமும் மடிந்திருக்கவேண்டும்.
காஸாவில் சாலை மூடல்கள், நடமாடுவதற்கான கட்டுப்பாடுகள், கடுமையான சோதனைகள் போன்றவற்றால் நிவாரணப் பணிகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லை என்று ஐ.நா அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
காசாவுக்குள் வான் மற்றும் கடல் வழி நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும் நிலம் மூலம் பொருட்களை கொண்டு வருவதற்கு மாற்றாக அவை இல்லை என்று அமைப்புகள் கூறுகின்றன.
இதற்கிடையே இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் அலுவலகம், ராஃபா வட்டாரத்தைத் தாக்கும் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் மார்ச் 15ஆம் தேதி கூறியது.
ஆனால் அதற்கான காலக்கெடுவை பற்றி அது தெரிவிக்கவில்லை.
ராஃபாவில்தான் காஸா மக்களில் பாதிக்கும் மேற்பட்ட சுமார் 2.3 மில்லியன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
ஹமாஸின் போர் நிறுத்த கோரிக்கைகளை ராய்ட்டர்ஸ் ஆராய்ந்தது.
அதில், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக ஏறக்குறைய 12க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ஒரு வார கால போர் நிறுத்தத்தின்போது விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஒரு கட்டடத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்துகிறது. ஆனால் இஸ்ரேல் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு மட்டுமே தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.