மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புட்டின் அபார வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம் 71 வயதாகும் திரு புட்டின், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ரஷ்யாவின் அதிபராகப் பொறுப்பு வகிப்பது உறுதியாகியுள்ளது.
இந்தத் தவணையை அவர் நிறைவுசெய்தால், கடந்த 200 ஆண்டுகளில் ரஷ்யாவில் நீண்டகாலம் பதவி வகித்த அதிபர் என்ற பெருமை அவரைச் சேரும். தற்போது முன்னாள் அதிபர் ஜோசஃப் ஸ்டாலின் அந்தச் சிறப்புக்குரியவராகப் போற்றப்படுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) வெளியான, வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் திரு புட்டினுக்கு 87.8 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த பிறகு ரஷ்ய அதிபர் ஒருவருக்குப் பதிவான ஆக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் அவை.
மற்றொரு கருத்துக் கணிப்பு நிறுவனம் திரு புட்டினுக்கு 87 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தெரிவித்தது.
அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் துல்லியமாக இருப்பதை முதற்கட்டமாக வெளியான அதிகாரபூர்வத் தேர்தல் முடிவுகள் காட்டின.
ஆனால், ரஷ்ய அதிபர் தேர்தல் சுதந்திரமானதோ நியாயமானதோ அன்று என அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கூறியுள்ளன. அரசியல் எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும் கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டதையும் அவை சுட்டின.
திரு புட்டினை எதிர்த்துக் களமிறங்கியோரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிக்கோலாய் கரிடோனோவ் நான்கு விழுக்காட்டிற்குக் குறைவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலும், புதியவரான விளாடிஸ்லாவ் தவான்கோவ் மூன்றாம் நிலையிலும் லெனோய்ட் ஸ்லட்ஸ்கி நான்காம் நிலையிலும் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறின.
மாஸ்கோவில் வெற்றியுரை ஆற்றிய திரு புட்டின், உக்ரேனில் மேற்கொள்ளப்படும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ தொடர்பான அம்சங்களுக்குத் தீர்வுகாண முன்னுரிமை தரப்போவதாகக் கூறினார்.
மேலும், ரஷ்ய ராணுவத்தை வலுப்படுத்தவும் அவர் உறுதியளித்தார்.
ரஷ்யத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாகத் தாம் கருதுவதாகச் செய்தியாளர்களிடம் கூறிய திரு புட்டின், நவல்னி-தரப்பினர் தம்மை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் தேர்தல் முடிவில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.
திரு நவல்னியின் மரணம் குறித்து முதல்முறையாகக் கருத்துரைத்த திரு புட்டின், அது ஒரு சோகமான சம்பவம் என்றார்.
ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற மூன்று நாள்களில் உக்ரேன், ரஷ்யாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்படச் சில பகுதிகளில் தாக்குதல் மேற்கொண்டது. அதற்குத் தக்க தண்டனை அளிக்கப்படும் என்று திரு புட்டின் சூளுரைத்துள்ளார்.