கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது திங்கட்கிழமையன்று (மார்ச் 18) மருத்துவமனையிலிருந்து விடு திரும்பியதாக அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அழற்சி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக 98 வயதாகும் டாக்டர் மகாதீர் இவ்வாண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று மலேசியாவின் தேசிய இதயக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு திங்கட்கிழமைதான் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதயப் பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் டாக்டர் மகாதீர் கடந்த சில ஆண்டுகளாகப் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“மகாதீர் இன்று தேசிய இதயக் கழகத்திலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பினார்,” என்று அவரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. மேல்விரங்கள் வழங்கப்படவில்லை.
டாக்டர் மகாதீர், 2003 வரை 22 ஆண்டுகளாக மலேசியப் பிரதமராகப் பதவி வகித்தார். 2018ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக அவர் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
முன்பு தாம் தலைவராக இருந்த கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டு டாக்டர் மகாதீர் வெற்றிபெற்றார். அப்போது அவருக்கு வயது 92.
அதற்கு ஈராண்டுகளுக்குப் பிறகு கூட்டணிக்குள் ஏற்பட்ட விரிசல்கள் காரணமாக டாக்டர் மகாதீரின் அரசாங்கம் கவிழ்ந்தது.