வாஷிங்டன்: ஹமாஸ் போராளிப் படையைச் சேர்ந்த உயர்மட்ட தலைவர்களில் ஒருவரை இஸ்ரேலிய படைகள் கொன்றுவிட்டன என்று வெள்ளை மாளிகையின் மூத்த பேச்சாளர் ஒருவர் செவ்வாய்க் கிழமை (மார்ச் 18) அன்று தெரிவித்தார்.
ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தளபதியான மரவான் இஸ்ஸா, ‘கடந்தவாரம் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டார்’ என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவான் வெள்ளைமாளிகையில் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.
ஊடகங்களுடன் பேச அதிகாரமில்லாததால் தன்னுடய பெயரை குறிப்பிட விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், இஸ்ரேல் இஸ்ஸாவின் மரணத்தை உறுதிப்படுத்தவில்லை என்றார்.
ஆனால் அவர் உயிரிழந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் கூறினார்.
மார்ச் 9, 10 தேதிகளில் இரவு இஸ்ஸாவைக் குறி வைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்கின.
அந்தத் தாக்குதலில் இஸ்ரேலிய விமானங்கள் மத்திய காஸாவில் உள்ள நுசெரட்டில் உள்ள நிலத்தடி இடங்களைக் குறிவைத்து, வான்வழியாகத் தாக்குதலைகளை மேற்கொண்டன. இந்த இடத்தை இஸ்ஸாவும் ஹமாஸ் குழுவின் ஆயுதங்களுக்குப் பொறுப்பான மற்றொரு மூத்த தலைவரும் பயன்படுத்தியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்திருந்தார்.
போர் தொடங்கியதிலிருந்து சில முக்கிய உறுப்பினர்களை இழந்துவிட்டதாக ஹமாஸ் கூறியிருந்தது.
ஆனால் சல்லிவனின் கருத்துக்கு ஹமாஸ் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலும் அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர்களை முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ள நிலையில் இஸ்ஸாவின் மரணம் அதற்கு முக்கிய வெற்றியாக இருக்கும் என கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் இழந்த தலைவர்களுக்குப் பதிலாக புதியவர்களை ஹமாஸ் நியமித்து வந்துள்ளது.
மேலும் பெரும்பாலான ஹமாஸின் முக்கிய தலைவர்கள் காஸாவுக்கு வெளியே இருந்து வருகின்றனர்.
மற்றொரு நிலவரத்தில் ராஃபாவிலும் காஸா வட்டாரத்தின் மத்திய பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை விடியற்காலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் இருபதுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா வட்டார சுகாதார அதிகாரிகள் கூறினார்.
எகிப்திய எல்லையில் காஸாவுக்கு தெற்கே ராஃபா நகரம் அமைந்துள்ளது. அங்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இஸ்ரேலியப் படைகள் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் பல வீடுகள் நாசமடைந்ததாகவும் காஸா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய காஸாவில் உள்ள அல்-நுசெரட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் ஆறு பேர் கொல்லப்பட்டனர். “குண்டுவெடிப்புகள் மின்னலும் இடியுமாக இருந்தது,” என்று டெய்ர் பாலாவில் வசிக்கும் ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான ஷாபான் அப்துல் ரவு;ஃப் உரையாடும் செயலி வழியாகத் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான சண்டை ஆறாவது மாதமாக இம்மாதமும் தொடர்கிறது.