வாஷிங்டன்: சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலியால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து வர்த்தக, புலனாய்வுக் குழுவின் செனட்டர்களுக்கு தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விளக்கமளிக்க இருக்கின்றனர்.
இரு குழுக்களின் தலைவர்கள் மார்க் வார்னர், மரியா கேன்ட்வெல் மற்றும் குழுவில் உள்ள உயர்மட்ட குடியரசுக் கட்சியினரான திரு மார்கோ ருபியோ, டெட் குருஸ் ஆகியோருக்கு ரகசியக் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படவிருக்கிறது.
சீனாவைத் தளமாகக் கொண்ட ‘பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நடத்தி வருகிறது.
இந்தச் செயலியை ஆறு மாதங்களுக்குள் விற்றுவிட வேண்டும் அல்லது தடையைச் சந்திக்க நேரிடும் என்று கடந்த வாரம் பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் பிறகு டிக்டாக்கை எப்படி கையாள்வது என்பதை செனட் சபை தீர்மானிக்கவிருக்கிறது.
டிக்டாக் செயலியை அமெரிக்காவில் 170 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு தடை விதிக்க அந்தச் செயலியின் பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்காவின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பைடன் நிர்வாகமும் தேசிய பாதுகாப்புக்கு டிக்டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பயனாளர்களின் தகவல்களை அளிக்க டிக்டாக்கை சீனா கட்டாயப்படுத்தலாம் என்பதே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
டிக்டாக் ஒரு போதும் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளது.