மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனத் தலைமையகத்தில் நடந்த திருட்டுச் சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சம்பவத்தில், பெண் ஒருவர் திருடுவதற்குமுன் ‘யோகா’ பயிற்சியில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராப் பதிவுகள் மூலம் தெரியவந்தது.
அந்தப் பெண் பாதாம் ‘குரோய்சான்’, காலணி, தூய்மைப்படுத்த உதவும் பொருள்கள் ஆகியவற்றைத் திருடியதாக மார்ச் 20 ஆம் தேதி ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்தது.
பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனக் கார் நிறுத்துமிடத்தில் இரவுநேரத்தில், கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு அந்தப் பெண் பயிற்சியில் ஈடுபட்டார்.
அவர்மீது திருட்டு, பூட்டிய இடத்தில் புகுந்து திருடியது, திருடத் தேவையான பொருள்களுடன் திருடச்சென்றது ஆகியவை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மே 22ஆம் தேதி நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்வார்.
திருட்டுச் சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமராப் பதிவுகள் வியப்பளிப்பதாக பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனம் கூறியது.
“பூட்டிய இடத்தில் திருடச் செல்வதற்கு ‘யோகா’ முக்கியம் போலிருக்கிறது,” என்றும் அது இன்ஸ்டகிராமில் பதிவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.