பெட்டாலிங் ஜெயா: சர்ச்சைக்குரிய வகையில் காலுறையில் “அல்லா” என்று அச்சிடப்பட்டிருந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் கூறியுள்ளார்.
“இதுபோன்ற காலுறைகளின் விற்பனை மலேசியாவின் முஸ்லிம் மக்களின் உணர்வைப் புண்படுத்தக்கூடிய செயல். அத்துடன் தேசிய நல்லிணக்கத்துக்கு விடப்பட்டுள்ள பெரும் மிரட்டல்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.
‘அல்லா என்ற சொல் முஸ்லிம்களால் உன்னதமாகப் போற்றப்படுகிறது. அதுவும் இந்த புனித ரமலான் மாத காலத்தில் இதுபோன்ற செயல் ஏற்கத்தக்கதல்ல.
“இது நடந்திருக்கக் கூடாத ஒரு செயல். பல இன சமூகம் ஒற்றுமையாக இருந்து ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரையில் அண்மையில்தான் கூறியிருந்தேன். இருப்பினும் இந்தச் செயல் நிகழ்ந்துள்ளது.
“இது வேண்டுமென்றோ அல்லது எதார்த்தமாகவோ செய்யப்பட்ட செயலாக இருக்கலாம். இதுபோன்ற காலுறைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதோ அல்லது உள்ளூர்த் தொழிற்கூடங்களில் தயாரானவையோ என எப்படி இருந்தாலும் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இதற்கு எதிராக சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும்.”
மலேசிய ஊழியர்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் மலேசியர்களின் உணர்வுகளை அறியாமல் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது ஏற்கக்கூடியதல்ல என்றும் மாமன்னர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“பல கலாசாரங்களைக் கொண்ட சமுதாயத்தில் காலம் காலமாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். சமய, இனப் பிரச்சினைகளில் ஏற்படும் தவறுகளை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை மீண்டும் நிகழ்வதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது,” என்று செவ்வாய்க்கிழமை (19.3.24) மாமன்னர் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுபோன்ற காலூறைகளை விற்பனை செய்த ‘கேகே சூப்பர் மார்ட்’ என்னும் நிறுவனம், அவை அனைத்தையும் விற்பனையில் இருந்து மீட்டுக்கொண்டதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். விற்பனை செய்யப்பட்ட அந்தக் காலுறைகள் விற்பனையாளர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது என்று அந்த அறிக்கையில் கேகே மார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.