இஸ்லாமாபாத்: பொருளியல் சிக்கலில் இருந்து மீண்டு வர பாகிஸ்தானுக்கு அனைத்துலகப் பண நிதியம் உதவி வருகிறது.
இந்நிலையில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை பண நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் பெறவுள்ளது.
தற்போது இரண்டு தரப்புகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. விரைவில் ஒப்பந்தம் முழுமையாக ஒப்புதல் பெற்று கொஞ்சம் கொஞ்சமாக நிதி பாகிஸ்தானுக்கு நிதியம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பங்கு சந்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
கடன் சிக்கலில் இருந்த பொருளியலை முன்னேற்ற கடந்த ஆண்டு அனைத்துலக பண நிதியத்திடம் பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதியுதவி கேட்டது. அதைத்தொடர்ந்து நிதியம் இதுவரை 1.9 பில்லியன் டாலர் நிதி கொடுத்துள்ளது.
இந்த நிதியைத் தவிர்த்து மேலும் புதிதாக நிதியுதவி பெறவும் பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.