காஜாங்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர கூட்டுரிமை வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 14.5 மில்லியன் (S$4.1 மில்லியன்) மதிப்பிலான போதைப்பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்.
விநியோகம் செய்வதற்குமுன் அந்த வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கப்பட்டிருந்ததாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் விசாரணைத்துறை மார்ச் 21ஆம் தேதி கூறியது.
‘ஐஸ்’ போதைப்பொருள், தூள் வடிவிலான எக்ஸ்டசி, உட்பட மேலும் பல போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் 1.8 மில்லியன் போதைப் புழங்கிகளுக்குப் போதுமானது எனக் கூறப்பட்டது.
மார்ச் 19ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 33 வயதும் 44 வயதும் நிரம்பிய ஆடவர் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆடவர் இருவரும் மார்ச் 25ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.