கார்கிவ்: உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பின் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது ஐவர் மாண்டனர்.
மேலும், ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மின்சாரமில்லாமல் பாதிக்கப்பட்டதாக கியவ் தெரிவித்தது. இது, உக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்பின்மீது மேற்கொள்ளப்பட்ட ஆக மோசமான ஆகாயப் படைத் தாக்குதலாகும்.
தெற்கு உக்ரேனிய நகரான ஸப்போரிஷ்சியாவில் இருக்கும் உக்ரேனின் ஆகப் பெரிய அணைக்கட்டான ட்னிப்ரோஹெச்இஎஸ் ரஷ்யத் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் நகரில் எட்டு முறை ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்நகர நிர்வாகம் முன்னதாகக் கூறியிருந்தது.
வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 22) உக்ரேனின் கார்கிவ் நகரில் சுமார் 15 முறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நகர மேயர் இஹோர் டெரெக்கோவ் தெரிவித்தார்.
ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் கார்கிவ் நகரின் மின்சார விநியோகக் கட்டமைப்பைக் குறிவைத்ததுபோல் தெரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
அந்நகரின் நீர்க் குழாய்கள் சில செயல்படாமல் போனதாக அவர் கூறியிருந்தார்.
மத்திய உக்ரேனிய நகரான கிரிவ்யி ரீயிலும் சில முறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக அதன் மேயர் ஒலெக்சாண்டர் வில்குல் சொன்னார். ஆனால் மேல்விவரங்கள் ஏதும் அவர் வழங்கவில்லை.
மத்திய உக்ரேனின் மற்றொரு நகரான வின்னிட்சியாவில் முக்கிய உள்கட்டமைப்பு ஒன்று தாக்கப்பட்டதாக அந்நகர மேயர் செர்ஹாய் போர்ஸோவ் தெரிவித்தார்.
மற்ற வட்டாரங்களில் உள்ள மின்சக்தி உள்கட்டமைப்புகளும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் கூறினர்.
“சேதப்படுத்துவது மட்டும் குறிக்கோள் இல்லை. சென்ற ஆண்டு நிகழ்ந்ததைப்போல் நாட்டின் எரிசக்தி முறையைப் பெரிய அளவில் செயலிழக்கச் செய்யும் முயற்சி இது,” என்று ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டார்.
இதற்கிடையே, உக்ரேனுக்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதி துரிதமாகவும் தீவிரத்துடனும் உக்ரேனுக்கு ராணுவ உதவி வழங்கவேண்டும் என்று பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
எனினும், உக்ரேனிய ராணுவத்திற்கு நிரந்தரமாக நிதியுதவி வழங்க வகைசெய்யும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இணக்கம் காணத் தவறிவிட்டனர். உக்ரேன் மீது படையெடுத்துள்ள வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்த சூழலில் இந்நிலை உருவாகியுள்ளது.
உக்ரேன், ஆயுதத் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்கு ராணுவ ரீதியாக உதவுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காதது அதற்கு முக்கியக் காரணமாகும்.