ஜெனிவா: பகிர்ந்துகொள்ளக்கூடிய தண்ணீர் வளங்கள் குறித்து எல்லைகளைத் தாண்டிய ஒத்துழைப்பு, பூசல்களைத் தடுத்து அமைதியைக் கொண்டுவரலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் (ஐநா) கூறியுள்ளது.
தனது தண்ணீர் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி அது அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகம் முழுதும் பருவநிலை மாற்றமும் அதிகரித்துவரும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் நிலவிவரும் நிலையில், எல்லைதாண்டிய தண்ணீர் ஒத்துழைப்பு, வட்டார நிலைத்தன்மைக்கும் பூசல்களைத் தடுப்பதற்கும் மிக முக்கியம் என்று ஐநா வலியுறுத்தியது.
புதுநீர் வளங்களில் 60 விழுக்காட்டுக்கும் மேல் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்படுவதாக ஐக்கிய நாட்டுத் தண்ணீர் மாநாட்டின் செயலாளர் சொஞ்சா கோப்பல், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஐரோப்பாவில் உள்ள ‘ரைன்’, ‘டேனுப்’ ஆறுகள், ஆசியாவில் உள்ள மெக்கோங் ஆறு, ஆப்பிரிக்காவில் உள்ள நைல் நதி, லத்தின் அமெரிக்காவின் அமேசான் ஆகியவை அவற்றில் அடங்கும்.
தண்ணீர் தொடர்பில் ஒத்துழைப்பது அமைதிக்கும் பருவநிலை நடவடிக்கைகளுக்கான மேம்பாட்டுக்கும் மிக முக்கியம் என்றார் அவர்.
தண்ணீர் மிக முக்கியமான வளம் என்று கூறிய திருவாட்டி கோப்பல், அது பூசல்களில் சிக்கியுள்ள நாடுகள் தீர்வுகாண வழி வகுக்கும் என்றும் தெரிவித்தார். இது மற்ற விவகாரங்களிலும் ஒத்துழைப்பைத் தொடங்க அது உதவும் என்றார் அவர்.