ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம் மார்ச் 23 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தச் சட்டம் சீன நிர்வாகத்தின் கீழ் வரும் அந்நகரத்தின் சுதந்திரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் என்றும் அனைத்துலக நிதி மையம் என்ற அதன் அந்தஸ்துக்கு கேடாக அமையும் என்றும் அனைத்துலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.
‘பிரிவு 23’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய சட்டத்துக்கு சில நாள்களுக்கு முன் பெய்ஜிங் ஆதரவு பெற்ற ஹாங்காங் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். புதிய சட்டத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக் குறைபாடுகள் என்று குறிப்பிடப்படும் அம்சங்களுக்கு எதிராக ஹாங்காங் காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியும்.
“இந்தச் சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சீன அரசாங்கம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது,” என்றார் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி ஜான் லீ.
இந்தப் புதிய சட்டம் ஹாங்காங்கின் சுயாட்சியை மேலும் சிதைக்கும் என்றும் அனைத்துலக வர்த்தக மையமாக விளங்கும் அதன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா தனது அக்கறையை வெளிப்படுத்தியது.
“ தேசவிரோதம், அரசாங்க ரகசியங்கள், வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பில் இருத்தல் போன்றவை பற்றிய தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகள் புதிய சட்டத்தில் இருப்பதால், அதன் தொடர்பான கருத்து வேறுபாடுகளைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
எடிலெய்டில் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்திய ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும், ஹாங்காங்கில் சுயாட்சி, சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தனர்.
ஹாங்காங்குக்குப் பயணம் மேற்கொள்ளும் தனது குடிமக்களைக் கவனமுடன் இருக்குமாறு ஆஸ்திரேலியா, பிரிட்டன், தைவான் ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன.
“அந்நகரில் தெரியாமல் நீங்கள் செய்யும் செயல் சட்டத்துக்குப் புறம்பான செயல் என வகைப்படுத்தப்பட்டு, நீங்கள் தடுத்து வைக்கப்படும் சாத்தியம் உள்ளது,” என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்தது.
இதற்கிடையே, புதிய சட்டம் தொடர்பில் உண்மையை திரிக்கும், பயமுறுத்தும் மற்றும் பீதியை பரப்பும் கருத்துகள் போன்ற அரசியல் சூழ்ச்சிகளை ஹாங்காங் கடுமையாகக் கண்டித்துள்ளது.