கோலாலம்பூர்: மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிம், பல்லின மலேசிய மக்களின் ஒற்றுமையே தமக்கு வழங்கப்படும் அர்த்தமுள்ள பிறந்தநாள் பரிசாக விளங்கும் என்று கூறியுள்ளார்.
தமது அதிகாரபூர்வ பிறந்தநாளான மார்ச் 23ஆம் தேதியன்று மாமன்னர் ஃபேஸ்புக்கில் அவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இன, சமய பேதமின்றி மலேசிய மக்கள் கடைப்பிடிக்கும் நல்லிணக்கம் நாட்டின் நிலைத்தன்மைக்கு மிக முக்கியம் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“அதிகாரபூர்வ பிறந்தநாளை முன்னிட்டு, ‘கேக்’, பழங்கள், மலர்கள் போன்ற பரிசுகளைப் பெற்றுக்கொண்டேன். பரிசுகளை அனுப்பிய அனைவருக்கும் நன்றி!
“இருப்பினும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையையே அர்த்தமுள்ள பரிசாகக் கருதுகிறேன்.நாட்டின் வளப்பத்துக்கு அது முக்கியம்,” என்றார் மாமன்னர்.
தாம் எப்போதும் ஜோகூரில் பல்லின மக்களை ஒன்றுபடுத்துவதில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் ‘பங்சா ஜோகூர்’ எனும் அம்சத்தை வலியுறுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.
சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கு ‘பங்சா ஜோகூர்’ அம்சம் சிறந்த எடுத்துக்காட்டு என்றார் அவர்.
ஜோகூர் மாநிலத்தில் பல்லின மக்களுக்கு உதவக் கைகொடுக்கும் அரச ஜோகூர் அறக்கட்டளையின் நடவடிக்கைகள் குறித்தும் மாமன்னர் எடுத்துரைத்தார்.
சுல்தான் இப்ராகிம் ஜோகூர் அறக்கட்டளை திரட்டிய நன்கொடைகள் மாநிலத்திலுள்ள வசதி குறைந்தோரின் சுமையைக் குறைக்க உதவியதாக அவர் குறிப்பிட்டார்.