சிப்பாங்: தமது மாணவர் ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு வைத்திருந்ததாக மலேசியாவில் உள்ள ஆசிரியை ஒருவருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதியன்று மாணவரின் தாயார் புகார் அளித்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோஃப் தெரிவித்தார்.
தமது மகனின் கழுத்தில் சிவப்பு நிற வடுக்கள் இருந்ததை அந்த 46 வயது பெண் கண்டதாகக் கூறப்படுகிறது.
தமது 16 வயது மகன் அந்தக் கணித ஆசிரியையிடம் பாடம் கற்று வீடு திரும்பியதை அடுத்து, அவரது கழுத்தில் அந்த வடுக்கள் தென்பட்டதாக அப்பெண் தெரிவித்தார்.
அந்த ஆசிரியையுடன் நூலகத்தில் இருந்ததாக அந்தச் சிறுவன் தெரிவித்ததாக நம்பப்படுகிறது.
ஆசிரியை தம்மை கட்டியணைத்து முத்தமிட்டதாகவும் அதன் விளைவாக தமது கழுத்தில் வடுக்கள் ஏற்பட்டதாகவும் அந்தச் சிறுவன் கூறியதாக திரு வான் கமருல் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 37 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் மருத்துவச் சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக திரு வான் கமருல் கூறினார்.
அந்த ஆசிரியையும் மாணவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த காதலை வெளிப்படுத்தும் வகையில் பல குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாக தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சிப்பாங் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.