ஹாங்காங்: புதிதாக நடப்புக்கு வந்துள்ள தேசிய பாதுகாப்புச் சட்டம் குறித்த விமர்சனங்களை வெளியிடுவதும் பகிர்வதும் சட்டத்தை மீறுவதாக இருக்கலாம் என்றும் அச்சட்டத்தின் கீழ் அரசுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதற்கான கடுமையான தண்டனை விதிக்கப்படலாம் என்றும் ஹாங்காங் நீதி அமைச்சர் பால் லாம் எச்சரித்துள்ளார்.
மார்ச் 23 அன்று நடைமுறைக்கு வந்த 23வது சட்டப்பிரிவு, தேச துரோகம், நாட்டுக்கு எதிரான போராட்டம், உளவு, சதி வேலை, வெளிநாடுகளின் தலையீடு உள்ளிட்ட ஐந்து வகையான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை வரை விதிக்க வகை செய்கிறது.
இச்சட்டம், பிரிட்டிஷ் காலனித்துவ கால ‘அரசுக்கு எதிரான கீழறுப்பு’ என்ற குற்றத்தை விரிவுபடுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதையும் உள்ளடக்கியுள்ளது.
வெளிநாடுகள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் வெளியிடும் இணைய விமர்சன அறிக்கைகளை, மீண்டும் வெளியிட்டால் அவர்களின் ‘நோக்கம், காரணத்தை’ப் பொறுத்து குற்றம் புரிந்தவர் ஆவார் என்று நீதி அமைச்சின் செயலாளர் பால் லாம், மார்ச் 24ஆம் தேதி தொலைக்காட்சி நேர்காணலில் கூறினார்.
“ஹாங்காங் மற்றும் மத்திய அரசாங்கங்கள் மீது மற்ற குடியிருப்பாளர்களின் வெறுப்பைத் தூண்டும் நோக்கத்திற்காக அத்தகையை அறிக்கையை ஒப்புக்கொண்டு, அதில் தமது விமர்சனங்களையும் சேர்த்து, கூடுதல் கருத்துகளையும் முன்வைத்து வெளியிடுவது அத்தகைய சூழ்நிலைகளின் ஒன்றாக இருக்கலாம்,” என்று திரு லாம் கூறினார்.
“இதில் சட்டத்தை மீறும் அபாயம் உள்ளது,” என்றார் அவர்.
“நீங்கள் வீட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள், வேறு என்ன செயல்களைச் செய்திருக்கிறீர்கள் போன்ற கூடுதல் சான்றுகள் வழக்குத் தொடுப்பதற்காக சேகரிக்கப்பட வேண்டும்,” என்று அதே நேர்காணலில் பேசிய ஹாங்காங் தற்காப்பு அமைச்சர் கிறிஸ் டாங் கூறினார்.
புதிய சட்டமானது, 2019ஆம் ஆண்டில் இடம்பெற்ற மிகப்பெரிய, சில நேரங்களில் வன்முறை நிறைந்த ஜனநாயகப் போராட்டங்கள் முடக்கப்பட்டத்தைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் பெய்ஜிங் அமுல்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் விரிவாக்கமாகும்.
பெய்ஜிங் சட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கியமாக அதிகாரிகளை விமர்சிக்கும் இணையப் பதவிகளுக்காக பலர் மீது ‘தேச துரோக’ வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில், அரசியல் எதிர்ப்பையும் சிவில் சமூகத்தையும் அச்சட்டம் குழிதோண்டிப் புதைத்து விட்டது என்றும் புதிய சட்டம் குடியிருப்பாளர்களின் உரிமைகளை மேலும் குறைக்கும் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
எனினும், பெய்ஜிங் சட்டத்தில் உள்ள ‘சட்டக் குறைபாடுகளை’ நீக்குவதற்கும், 1997ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சீனா வசம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து ஹாங்காங் சிறிய அரசியலமைப்பின் அடிப்படைச் சட்டத்தின்கீழ் ‘அரசியலமைப்புக் கடமையை’ நிறைவேற்றுவதற்கும் புதிய சட்டம் இயற்றப்படவேண்டியிருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.