பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் உள்ள கோலாலம்பூர்-கராக் நெடுஞ்சாலையில் சுற்றுலாப் பேருந்து ஒன்று கவிழ்ந்ததை அடுத்து இருவர் மாண்டனர், 13 பேர் காயமடைந்தனர்.
மாண்டவர்களில் வெளிநாட்டு ஆடவர் ஒருவரும் மலேசியப் பெண் ஒருவரும் அடங்குவர்.
இந்த விபத்து மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
காலை 8 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக பெந்தோங் காவல்துறை கண்காணிப்பாளர் ஸைஹம் முகம்மது கஹார் தெரிவித்தார்.
விபத்து நிகழ்ந்தபோது பேருந்தில் ஓட்டுநர் உட்பட 20 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பாகாங் தலைநகர் குவந்தானுக்குச் சென்றுகொண்டிருந்ததாக அவர் கூறினார்.
பேருந்து கவிழ்ந்ததற்கு முன்பு அதன் மீது ஏதோ மோதியிருக்கக்கூடும் என்று பாகாங் தீயணைப்பு, மீட்புத்துறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
பேருந்து ஓட்டுநரும் பெண் ஒருவரும் படுகாயம் அடைந்ததாகவும் 11 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் ஸைஹம் கூறினார்.
ஐவர் காயமின்றி தப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
காயமடைந்தோர் பெந்தோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
பேருந்துக்கு அடியில் சிலர் சிக்கியிருப்பதாக சமூக ஊடகத்தில் வலம் வந்த செய்திகள் உண்மையற்றவை என்று அவர் கூறினார்.
இந்த விபத்து காரணமாக கராக் நெடுஞ்சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.