பால்டிமோர், மேரிலேண்ட்: அண்மையில் அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் சிங்கப்பூரில் பதிவான சரக்குக் கப்பல் மோதியதில் ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது.
பாலத்தில் இருந்த ஊழியர்கள் சிலர் ஆற்றில் விழுந்தனர். இருவரை மீட்புப் பணியாளர்கள் பத்திரமாக மீட்டனர்.
இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், நான்கு பேரை இன்னும் காணவில்லை.
அவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தேடுதல் பணியில் உள்ள சவால்கள், அபாயங்களைக் கருத்தில் கொண்டு அந்த நால்வரின் சடலங்களைத் தேடும் பணி கைவிடப்பட்டுள்ளது.
ஆற்றுக்கு அடியில் மிகவும் இருட்டாக இருப்பதாகவும் ஆங்காங்கே இடிபாடுகள் இருப்பதாலும் முக்குளிப்பாளர்களுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மாயமான ஊழியர்கள் அனைவரும் மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஊழியர்களாவர்.
பாலத்தில் இரவு நேரப் பழுதுபார்ப்புப் பணிகளில் ஈடுபட்ட எட்டு பேர் கொண்ட ஊழியர்க் குழுவில் அவர்கள் அடங்குவர்.
இதற்கிடையே, ஆற்றில் சிதறிக்கிடக்கும் இடிபாடுகளை அகற்றும் பணிகள் மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கின. பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு பாரந்தூக்கிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பால்டிமோர் துறைமுகம் வழக்கநிலைக்குத் திரும்ப நீண்டகாலம் எடுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஆகப் பெரிய பாரந்தூக்கியுடன் மேலும் பல பாரந்தூக்கிகளும் பயன்படுத்தப்படும் என்று மேரிலேண்ட் ஆளுநர் வெஸ் மோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இடிபாடுகளை ஆற்றிலிருந்து தூக்குவதற்கு முன்பு அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டியுள்ளது. பாரந்தூக்கியைப் பயன்படுத்தி தூக்கக்கூடிய அளவுக்கு அவை இருக்க வேண்டும். இதை எப்படி செய்வது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்,” என்று அமெரிக்க கடலோரக் காவல் படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் ஷெனன் கில்ரத் கூறினார்.