புத்ராஜெயா: மலேசியாவின் பினாங்குத் தீவில் முதல்முறையாக இலகு ரயில் போக்குவரத்தை (எல்ஆர்டி) அமைக்கும் திட்டம் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்குள் தொடங்கும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் மத்திய அரசாங்கம் அத்திட்டத்திற்கு அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறிய அவர், 2030ல் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மார்ச் 29ஆம் தேதி மலேசியப் போக்குவரத்து அமைச்சில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
எல்ஆர்டி திட்டத்திற்கான குத்தகைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்ஆர்எஸ் நிறுவனக் கூட்டமைப்புக்கு ஒரு பகுதிக்கான குத்தகை, போட்டியின்றி வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மற்ற இரு குத்தகைகளும் ஏல அடிப்படையில் வழங்கப்படும்.
புதிய எல்ஆர்டி ரயில் பாதையை உருவாக்கி, உரிமை ஏற்கும் பொறுப்பை எம்ஆர்டி கார்ப் நிறுவனத்திற்கு வழங்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் தந்திருப்பதாக அமைச்சர் லோக் கூறினார்.
பினாங்கு எல்ஆர்டி முட்டியாரா இலகு ரயில் பாதை ஏறக்குறைய 29 கிலோமீட்டர் நீளத்தில் அமையும். அதில் 20 ரயில் நிலையங்களும் பினாங்கிலும் பட்டர்வொர்த்திலும் இரண்டு முனையங்களும் அமையவிருக்கின்றன.