வேலை இல்லை என்று கூறிவிட்டு தன்னோடு வினோதமான உரையாடலை நிகழ்த்திய முதலாளி பற்றி ஒருவர் அண்மையில் ‘ரெடிட்’ தளத்தில் பதிவிட்டதை அடுத்து, பலரது கவனத்தையும் அந்தப் பதிவு ஈர்த்துள்ளது.
வேலையை விட்டு நீக்குவதாகத் தன் ஊழியரிடம் கூறியதை அடுத்து, குடும்பமாகத் தான் வேறு கண்டத்திற்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக அந்த முதலாளி பேச ஆரம்பித்துவிட்டார்.
அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை.
“உனக்கு விடுமுறைத் திட்டம் ஏதும் இல்லையா? ஏன் இல்லை? ஓய்வு எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவழி,” என்று வேலையிலிருந்து நீக்கப்பட்ட அந்த ஊழியருக்கு அறிவுரையும் கூறினார் அந்த முதலாளி.
நிலைமையைப் புரிந்துதான் பேசுகிறாரா அல்லது வேண்டுமென்றே தன்னைக் கேலி செய்கிறாரா என்ற சந்தேகம் அந்த ஊழியருக்கு வந்துவிட்டது.
பதிவைப் பார்த்தோர் அந்த முதலாளியின் செயலைச் சாடினர்.
பின்னர், முதலாளியுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் சோகக் கதைகளையும் இணையவாசிகள் பதிவிடத் தொடங்கிவிட்டனர்!