பொல்ஸானோ: இத்தாலியின் பொல்ஸானோ மாநிலத்தில் வேலை செய்யும் தந்தையருக்குத் ‘தாய்ப்பால்’ இடைவேளை வழங்கப்படுகிறது.
இந்த இடைவேளையின்போது தங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானவற்றை தந்தையர் செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
உதாரணத்துக்கு, புதிதாகப் பிறந்த குழந்தையை வீட்டில் இருந்தவாறு மனைவி பார்த்துக்கொள்ளும்போது மற்ற பிள்ளைகளை அவரது கணவர் பள்ளிகளிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்.
ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இத்தாலியின் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
இதுகுறித்து இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் போப்பாண்டவர் ஃபிரான்சிசும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இத்தாலியின் பொல்ஸானோ மாநிலத்தில் மட்டும் குழந்தை பிறப்பு விகிதம் பல ஆண்டுகளாகச் சீராக இருந்து வருகிறது.
அங்குள்ள பெற்றோருக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பாலர் பள்ளிகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள், மளிகைப் பொருள்கள், சுகாதாரப் பராமரிப்பு, மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், பள்ளி நடவடிக்கைகள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன.
கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்க இத்தாலியத் தம்பதியரை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கையை பொல்ஸானோ மாநிலம் எடுத்துள்ளது.