கோலாலம்பூர்: கேகே சூப்பர் மார்ட் உரிமையாளர் சாய் கீ கான் மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இஸ்தானா நெகாராவில் புதன்கிழமை (ஏப்ரல் 3) இடம்பெற்ற 15 நிமிட சந்திப்பில், சர்ச்சையை ஏற்படுத்திய அல்லாஹ் காலுறை சம்பவம் தொடர்பாக மாமன்னரிடமும் அனைத்து முஸ்லிம்களிடமும் மன்னிப்புக் கோரியதுடன் இனிமேல் இதுபோன்ற தவறுகள் எதுவும் நடக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
மலேசியாவில் உள்ள கேகே சூப்பர் மார்ட் அக்கம்பக்க கடைகளில் ‘அல்லாஹ்’ எனும் சொல் கொண்ட காலுறைகள் விற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
கேகே மார்ட் உட்பட அனைத்து தரப்பினரும் விற்கும் பொருள்கள் தொடர்பாக கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் மத நல்லிணக்கத்திற்குச் சிக்கல் வரும் நிலைக்குக் கொண்டு வரக் கூடாது என்றும் மாமன்னர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
கேகே சூப்பர் மார்ட் இதுபோன்ற விவகாரங்களை மீண்டும் எழுப்பக்கூடாது என்றும் அல்லாஹ் காலுறை விவகாரத்தில் இனிமேல் யாரும் மக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாமன்னர் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னதாக மலேசியாவெங்கும் அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 800 கடைகளில் மன்னிப்புத் தெரிவிக்கும் வகையில் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டன.
காலுறைகளை விநியோகம் செய்த ஸின் ஜியான் சாங் நிறுவனத்துக்கு எதிராக கேகே மார்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.