ஹுவாலியென்: தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி 25 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட யுரேனஸ் என்ற கட்டடம் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. அதை முற்றிலுமாக இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக அங்கு பழம், பூ, நறுமணம் வீசும் தாள்கள் ஒரு மேசைமீது ஏப்ரல் 5ஆம் தேதி வைக்கப்பட்டன.
நிலநடுக்கம் மையம் கொண்ட ஹுவாலியன் நகரில் உள்ள யுரேனஸ் கட்டடம் கண்ணாடி முகப்புக் கொண்ட வீடு, கடைகள் அடங்கிய 10 மாடிக் கட்டடம். அந்தக் கட்டடம் அப்பகுதியில் 40 ஆண்டுகளாக இருக்கிறது.
தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 எனப் பதிவானது. அதில் யுரேனஸ் கட்டடம் 45 டிகிரி அளவு சாய்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்டடத்தின் முறுக்கிய வடிவம் தைவான் நிலநடுக்கத்தின் முக்கிய அடையாளமாக காட்சி தருகிறது.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி அதை இடிக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். அது நல்லபடியாக நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யும் விதமாக அங்கு, கட்டடத்தின் முன் ஒரு மேசையில், பழம், பூ, நறுமணத் தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மேலும் அங்கு உயிரிழந்த ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையாகவும் அமையும் என்று நம்பப்படுகிறது.
காய்கறி வறுவல்கள், உடனடியாக சமைத்து உண்ணக்கூடிய நூடல்ஸ் உணவு வகைகள், சோடா தண்ணீர் போத்தல்கள், அடுக்கடுக்கான காகிதத் தாள்கள், பூங்கொத்துகள், நறுமண ஊதுவத்திகள் போன்றவையும் அங்கு வைக்கப்பட்டதாக ஏஎஃப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
“யுரேனஸ் கட்டடத்தை இடிக்கும் பணி நல்லபடியாக முடிய வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்,” என்று ஒலிபெருக்கி மூலம் ஒருவர் அறிவித்தார்.