நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலும் நியூஜெர்சி மாநிலத்திலும் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8ஆகப் பதிவானது.
அப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது மிகவும் அரிது. எனவே, அமெரிக்க நேரப்படி காலை 10.20 மணிக்கு அங்கு திடீரென்று அதிர்வுகள் ஏற்பட்டபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அமெரிக்க நேரப்படி மாலை 5.59 மணி அளவில் மீண்டும் அதிர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.
நிலநடுக்கம் காரணமாக மோசமான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார்.
இருப்பினும், மேலும் பல அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சாலைகளையும் பாலங்களையும் பொறியாளர்கள் குழு ஆய்வு செய்கிறது.
நிலநடுக்கம் காரணமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.