சோல்: தென்கொரிய மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அந்நாடு முடிவெடுத்ததை அடுத்து, தென்கொரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் கிட்டத்தட்ட ஆறு வாரங்களாக வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை இது மோசமாக்கியுள்ளது.
சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல் 2017ஆம் ஆண்டிலிருந்து தென்கொரியாவில் ஏறத்தாழ 3,750 பேர் மாண்டுவிட்டனர்.
போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவர்களுக்குத் தேவையான பராமரிப்புச் சேவையை வழங்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த நெருக்கடிநிலை முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் சூளுரைத்துள்ளார்.
“தென்கொரியாவின் மருத்துவக் கட்டமைப்பு முடங்கிவிட்டது. சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இதுதான் சரியான தருணம்,” என்று அவர் தெரிவித்தார்.
தென்கொரியாவின் தேர்தல் நெருங்குவதால் இந்த விவகாரம் குறித்து அதிபர் யூன் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.