கோலாலம்பூர்: தாய்லாந்தைச் சேர்ந்த தமது காதலியை சிலாங்கூர் மாநில செத்தியா அலாம் நகரில் உள்ள கூட்டுரிமைக் குடியிருப்பின் 23வது மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்ட ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநரான 37 வயது வி. நாதன் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு ஷா அலாம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் சிவாநந்தன் ராகவா தெரிவித்தார்.
32 வயது மவிக்கா லும்யாயை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி இரவு 10.02 மணி அளவில் கொலை செய்ததாக நாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மவிக்காவை நாதன் மாடியிலிருந்து தள்ளிவிடுவதற்கு முன்பு இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டதாகக் கூறும் சிலர் தெரிவித்தனர்.
உயரத்திலிருந்து விழுந்ததில் அப்பெண் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறையுடன் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.