ஹாங்காங்: இயந்திரப் பாகங்களாக வடிவமைக்கப்பட்ட 84 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$14.6 மி.) மதிப்புடைய தங்கம், ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
இதுவே 20 ஆண்டுகளில் நடந்துள்ள ஆகப் பெரிய தங்கம் கடத்தும் சம்பவம் என்று கூறப்படுகிறது.
ஜப்பானுக்கு அனுப்புவதாக இருந்த சரக்குகளில் இரண்டு மோட்டார் சுழலிகள், ஒரு ‘கியர்’, மூன்று திருகு தண்டுகள் ஆகியவற்றின் வடிவில் உருக்கப்பட்ட தங்கம் இருந்தது.
தங்கம் கடத்தும் சம்பவங்களை 2000ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து மதிப்பு, எடை ஆகிய இரண்டின் அடிப்படையில் ஆக அதிகம் சிக்கிய தங்கம் இது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு காற்றழுத்தச் சாதனங்களில் இயந்திரப் பாகங்கள்போல் வடிவமைக்கப்பட்ட அந்த தங்கத்தை ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தங்கத்தைக் கடத்தும் முயற்சி மார்ச் 27 முறியடிக்கப்பட்டதை அடுத்து கடந்த வாரம் உள்ளூர் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் கைது செய்யப்பட்டதாகத் தற்காலிக மூத்த சூப்பரின்டென்டண்ட் ஜேசன் லாவ் யுக்-லங் சொன்னார்.
ஜப்பானில் ஏறத்தாழ 10% இறக்குமதி வரியைச் செலுத்தாமல் தப்பிக்க, இந்தக் கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒட்டுமொத்த எடை 146 கிலோ என்று மதிப்பிடப்படுகிறது.
இதற்கிடையே, கைதான 31 வயது சந்தேக நபர், சரக்குகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் ஏற்றுமதி செய்துள்ளதன் சந்தேகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.